சென்னை
தி.மு.க. கூட்டணியில் தொகுதி குறைப்பு தொடர்பான திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு நாளை பதில் அளிப்பேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்ததுடன், விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்திருப்பது அவர்களின் கட்சி நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அதுகுறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க., இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம்.
அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம். மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். உங்களுடைய ஆதரவு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் உங்களுக்கு இருக்கும் என நான் தெரிவித்தேன். இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு இருக்கும்.
இடைத்தேர்தலில் நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அவர்களின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என உழைப்பார்கள். ஆனால் அதற்கான முடிவு மக்கள் கையில் உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கடற்கரை அருகில் தலைமை செயலகம் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வருகின்றன. எனவே, மக்களுக்காக கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் மக்கள் விரும்பும் திட்டமாக இருக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தி.மு.க.வில் தொடர்ந்து கூட்டணியில் இருந்த எங்களுக்கு தொகுதியை குறைத்துவிட்டு, புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிகமான தொகுதி (சீட்) ஒதுக்கப்பட்டது என திருமாவளவன் கூறும் கருத்துக்கு, நாளை (புதன்கிழமை) நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் என்னுடைய பதிலை கூறுகிறேன் என்றார்.