விருதுநகர்,
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கூறினார். விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மேலும் கூறுகையில்,நான் சென்னை சாலிகிராமத்தில் ஜனநாயக கடமையான ஓட்டினை போட்டு விட்டு மதுரை விமான நிலையம் வந்து விருதுநகருக்கு வந்து ஒன்றிய பகுதி, நகர் பகுதி உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டேன்.
80, 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.கண்டிப்பாக விருதுநகரில் முரசு சத்தம் கொட்டும் என ஆணித்தரமாக நம்புகின்றேன். வாக்குப்பதிவு அதிகமாக அளவில் நடந்துள்ளது உண்மையில் வரவேற்கக்ககூடியது எனக்கு ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு அதிகமாக வாக்குகள் அளித்துள்ளார்கள். மே 4 அதிகமான தொகுதிகளில் அதாவது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும். விருதுநகரில் நான் வெற்றி பெறுவது உறுதி. மக்களுக்கு களப்பணியாற்ற தயாராக இருக்கின்றேன். வாக்குப்பதிவு கூடியுள்ளது திமுக கூட்டணிக்கு தான் வெற்றியைத் தேடித்தரும். இதனை மே 4 வெளியாகும் தேர்தல் முடிவுகளில் அது தெரிய வரும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.