சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ரூ.1,000 விண்ணப்பபடிவ கட்டணத்துடன் பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், மகளிர், தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என்று விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் படைசூழ வந்து ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்து வந்தனர். விருப்ப மனு அளிப்பதற்கு மார்ச் 2-ந்தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் விருப்ப மனுவுக்காக கால அவகாசம் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விருப்ப மனு வினியோகம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வரலாறு காணாத வகையில் 15,372 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் மட்டும் 1,473 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் அதிகமான மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளது.
விருப்ப மனு முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர் நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக முனைப்பு காட்டி வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தவுடன் திமுக போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்படும்.
இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களை மாவட்ட வாரியாக அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வேட்பாளரை முடிவு செய்வார்.