தமிழக செய்திகள்

பானை சின்னத்திற்கு வாக்களித்து வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி கைது

களத்துமேடு நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுக நிர்வாகி தனது வாக்கை செலுத்தினார்.

கடலூர்,

தமிழக சட்டசபை தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது. வாக்களிப்பதை செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்ககூடாது என்றும், இதை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள எம்.ஜி.ஆர்.விக்கி என்ற விக்னேஸ்வரன் (வயது 33) என்பவர், களத்துமேடு நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 10 மணிக்கு தனது வாக்கை செலுத்தினார்.

அப்போது, தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரின் பானை சின்னத்திற்கு அவர் வாக்களித்து, அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதை தொடர்ந்து வீடியோ வைரலானது.

இதுபற்றி அறிந்த பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கமலம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஓட்டுப் பதிவை வீடியோ எடுத்த விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.