சென்னை
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்பு.
திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பு. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் டி.கே.எஸ். இளங்கோவனால் வாசிக்கப்பட்டது.
* பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம் திமுக தலைவர் கருணாநிதி
* கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர்
* கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி
* சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர்
* பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர்
* மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு அளித்தவர் திமுக தலைவர் கருணாநிதி
* ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 1956 முதலே குரல் கொடுத்து வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி
* கிராமப்புறங்களில் அரசு கல்லூரிகளை அமைத்தவர் கருணாநிதி
* வள்ளுவர் கோட்டம் முதல் கன்னியாகுமாரி வரை தமிழ் பரப்பியவர் கருணாநிதி
கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.