சென்னை,
சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக முதல்-அமைச்சர் விஜய் மீது தி.மு.க.வின் துணைக் கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து இன்றைய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
இருப்பினும் முதல்-அமைச்சர் விஜய் பேசியதில் இருந்து எந்த பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் முன்பு முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் தி.மு.க.வினர் இருக்கைக்கு சென்று அமருமாறு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து தி.மு.க.வினரை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இந்நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை அவருடைய அறையில் சந்தித்த திமுக துணை கொறடா கோவி.செழியன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பதில் உரையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது, அவையில் இல்லாதவர்களான முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் பற்றி பேசியது, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவை உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர்.