நாமக்கல்,
தவெக நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திமுகவின் அப்பட்டமான தேர்தல் விதிமீறல்; பறிமுதல் செய்யப்பட்ட திமுக பிரச்சார வாகனம்.
முதலில் நமது வெற்றிக் கழக தலைவரது பரப்புரையை முடக்க திட்டம் போட்டு தோல்வி அடைந்த திமுக, இப்போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் பரப்புரையையும் முடக்க திட்டம் போட்டு, அதிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
திருச்செங்கோட்டில் இன்று சாலப்பாளையம் பகுதியில் முறைப்படி அனுமதி பெற்று பரப்புரை மேற்கொண்டு வந்தோம். ஆனால் அதே பகுதியில், அதே நேரத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் அவரது கணவரும், திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளருமான சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், நமக்கு திட்டமிட்டு இடையூறு செய்யும் விதமாக, தங்கள் பரப்புரையில் ஈடுபட்டதுடன், நம் பரப்புரையை தடுக்கவும் முயன்றனர்.
உங்களிடம் பரப்புரை செய்வதற்கான அனுமதி இருக்கிறதா? என்று நாம் கேட்க, திமுக டிஎன்ஏ-வை நிரூபிக்கும் வகையில் ஆபாசமாகவும், அவதூறாகவும் அநாகரிகமாகவும் பேசி அராஜகம் செய்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
இன்றைய தினத்தில், இப்பகுதியில் திமுகவிற்கு பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில், நாம் பரப்புரைக்கு செல்வதற்கு முன்பே... ஒவ்வொரு வீடாக சென்று தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வரும்போது வீட்டை திறக்க கூடாது என சுரேஷ்பாபு மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக தேர்தல் ஆணையத்திடமும், காவல்துறையிடமும் புகார் அளித்தோம்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் நிலைய அதிகாரிகள், உரிய விசாரணைக்கு பிறகு, அனுமதி இல்லாமல் திமுகவினர் கொண்டு வந்திருந்த பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் திட்டமிட்டு நம் பரப்புரைக்கு இடையூறு செய்த திமுக நிர்வாகிகளை திருப்பி அனுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு களத்தில் குவியும் வெற்றிகளில் இதுவும் ஒன்று. களத்தில் நம்மை எதிர்கொள்ள முடியாமல், திருச்செங்கோட்டில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை பரப்புரை செய்யவிடாமல் திமுகவினர் அட்டூழியம் செய்து வருகிறார்கள்.
திமுகவினரின் வன்முறைக்கும், சட்டம் ஒழுங்கை துளியும் மதிக்காத அராஜகத்திற்கும் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுக்க தயாராகிவிட்டனர்.
உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
சட்ட ரீதியில் எதிர்த்து நிற்போம்... தீய சக்தி திமுகவை துரத்தியடிப்போம்!
விசில் போடு திருச்செங்கோடு...
இந்த அருண்ராஜ் என்றும் உங்களோடு!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.