தமிழக செய்திகள்

தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளது த.வெ.க. அரசு: மு.க. ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது.

சென்னை

தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை த.வெ.க. அரசு மாற்றியுள்ளது என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா கடந்த 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 7 பேருக்கும் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். அவர்களுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.

பெரிய அலை

அவர் கூட்டத்தில் பேசும்போது, ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வந்துள்ளது. விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள். குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா? இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், பரந்தூர் விமான நிலையம் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம், 25 ஆண்டுகள் பின் தங்கி சென்று விட்டது. தமிழகத்தில், ஆட்சியமைத்த கட்சிக்கு பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை. ஆனால், பெரிய அலை அடித்தது போன்றும், தமிழ்நாடே அவர்களுக்கு ஆதரவளித்தது போன்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

குதிரை பேரம்

உண்மையில் நம்முடைய கூட்டணி கட்சிகள் அளித்த ஆதரவில்தான் ஆட்சியமைத்து உள்ளனர். ஆனால், அதனையும் நம்பாமல் குதிரை பேரம் நடத்தும் கட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.விற்கு கொள்கையும், லட்சியமும் தான் முக்கியம். தி.மு.க. பார்க்காத தோல்வி இல்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது.

தொடர்ந்து அவர், என் மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; என் தியாகத்திற்கு மார்க் போட யாருக்கும் தகுதி இல்லை. தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளது த.வெ.க. அரசு. தமிழகத்தில் தற்போது, நம்முடைய ஆட்சி இருந்திருந்தால், பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் கிடைத்திருக்கும். ரூ.8 ஆயிரம் தொகையும் கிடைத்திருக்கும் என பேசினார்.

SCROLL FOR NEXT