கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும் - தி.மு.க. எச்சரிக்கை

ஆதாரங்கள் இல்லாமல், சட்டசபையில் தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. சீனிவாசன் (தி.மு.க.) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திரா முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படாவிட்டால், மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். ஆந்திர மாநில முதல்-மந்திரி மத்திய அரசு கூட்டணியில் இருக்கிறவர். அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலை முடக்குவதற்காகவும், இங்குள்ள தொழிலை அங்கு கொண்டு செல்வதற்காகவும் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

தமிழகத்திற்கு பாதிப்பு

கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தரப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் வராமல் தடுப்பதற்காக அவர்கள் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களும் தங்கள் பகுதிகளில்

விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு விமான நிலையம் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் மற்றும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதாரங்களோடு பேச வேண்டும்

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஆதாரங்கள் இல்லாமல் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, சட்டசபையில் தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. ஆதாரங்களை தந்துவிட்டு பேச வேண்டும்" என்று குறிப்பிட்டார்.