கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க அரசு ஒதுக்கிய தொகை எத்தனை கோடி தெரியுமா?

மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காரணமாக இருந்த தேர்தல் வாக்குறுதி, "அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்" என்பதுதான். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

மொத்தம் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் பயனாளிகளாக கண்டறியப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை 15-ந்தேதிதான் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், இன்று காலை யாரும் எதிர்பாராத வகையில், மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் இன்ப அதிர்ச்சி அடையும் வகையில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டது. செல்போனில் வந்த குறுஞ்செய்தியை பார்த்து, பலரால் நம்பவே முடியவில்லை.

இந்த நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரூ.5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதால், முன்கூட்டியே ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், கோடை கால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் சேர்த்து வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Also read:‘பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்’ - விஜய்

ஆனால், எதிர்க்கட்சிகளோ, தேர்தல் நேரத்தை மனதில் வைத்தே இதுபோன்று தி.மு.க. அரசு நடந்து கொண்டதாக குற்றம்சாட்டின. எது எப்படியோ, மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு ஜாக்பாட் அடித்துவிட்டது. இதற்கு, அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? ரூ.6,550 கோடி.