தமிழக செய்திகள்

நடைபாதை வசதி கொண்ட நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா...?

எந்த நகரங்களும் முழுமையான நடைபாதை வசதிகளை மக்களுக்கு கொடுக்க முடியாமல் திணறுகிறது.

சென்னை,

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் அது மக்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா? என்பதை விளக்கும் வகையில் 'ஸ்டேட் ஆப் இந்தியன் ஸ்டிரீட்ஸ் 2026' என்ற அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு அறிக்கையை ‘நியூ ரல் சிட்டி' என்ற நகர்ப்புற தரவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களின் உள்கட்டமைப்பை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் அமைப்பு ஆகும். அந்த வகையில் சாலைகளின் தரைமட்ட படங்கள், செயற்கைக்கோள் தரவுகளை சேகரித்து இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அதிலும் நடைபாதை இருக்கிறதா? என்று மட்டும் பார்க்காமல், அந்த நடைபாதையில் 100 மீட்டர் தூரத்துக்கு தொடர்ச்சி யாக எந்தவொரு தங்கு தடையுமின்றி ஒரு மனிதரால் நடக்க முடிகிறதா? என்ற அளவுகோலை அடிப்படையாக வைத்து கணக்கிட்டும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சென்னைக்கு 4-வது இடம்

அதன் அடிப்படையில், உத்தரபிர தேசமாநிலம் லக்னோவில் நடைபாதை வசதிகள் 28 சதவீதம் சரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பட்டியலில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100 கி.மீ. சாலையில் 28 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை வசதிகள் சரியாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தில் 25.9 சதவீதமும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரத்தில் 15.1 சதவீதமும் மட்டுமே சரியான நடை பாதை வசதிகள் இருக்கின்றன.

சென்னை 4-வது இடத்தில் 13.9 சதவீதம் மட்டுமே முறையான நடைபாதை வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் 13.4 சதவீதம், குருகிராம் 12.6 சதவீதம், இந்தூர் 8.5 சதவீதம், டெல்லி 7.8 சதவீ தம், ஆமதாபாத் 5.8 சதவீதம், மும்பை 5.5 சதவீதம் மட்டுமே சரியான நடைபாதை வசதிகள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாலையோர கடை, விளம்பர பலகை

இந்தியாவில் சுமார் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உள்ள நகரச்சாலைகளில் முறையான அல்லது பாதுகாப்பான நடைபாதைகளே இல்லை என்பதையும், இந்தியாவில் வாகனங்களுக்கு சாலைகளில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், நடந்து செல்லும் சாதாரண மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நடைபாதைகளில் சாலையோர கடைகள், விளம்பர பலகைகள் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் போன்ற பொதுப்பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் நடைபாதைகளின் நடுவிலேயே அமைக்கப்படுவது, நகர்ப்புற திட்டமிடல் முழுவதும் 'வாகனங்கள் வேகமாகச் செல்வதற்கே' முக்கியத்துவம் தருவது, பாதசாரிகளுக்கான இடத்தை சாலை விரிவாக்கத்திற்காக குறைத்துவிடுவது போன்றவற்றால் எந்த நகரங்களும் முழுமையான நடைபாதை வசதிகளை மக்களுக்கு கொடுக்க முடியாமல் திணறுகிறது.