சென்னை,
மாவட்ட கலெக்டர்கள், துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்து வருகிறார்கள். அதிலும், தலைமைச் செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என்ற பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையே தனி மவுசு இருந்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தின் முதல்-அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ஜோசப் விஜய், நேராக தலைமைச் செயலகத்தில் தனது அறைக்கு வந்து பொறுப்புகளை கவனித்தார்.
அதுவரை, அவருக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. முன்னதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர்களுடைய சிபாரிசுகள் தனக்கு வரும் முன்பே, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலாளர் சாய் குமாரை அழைத்து பேசினார். அவரும் முதல்-அமைச்சர் வேறு எதையோ கேட்பதற்காக கூப்பிடுகிறார் என்று நினைத்து சென்றார்.
ஆனால், தலைமைச் செயலாளர் சாய் குமாரிடம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தனது செயலாளர்களாக யாரை நியமனம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். பொதுவாக, எந்த முதல்-அமைச்சரும் இவ்வாறு கேட்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனக்கு, இவர்களை செயலாளர்களாக நியமியுங்கள் என்று பெயரைச் சொல்லியே கூறிவந்த நடைமுறை இருந்துள்ளது.
தற்போது, முதல்-அமைச்சரின் செயல்பாடு புதிதாக இருந்தாலும், உடனே தலைமைச் செயலாளர் சாய்குமாரும், செந்தில்குமாரை பரிந்துரை செய்துள்ளார். மற்றொருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சுமி பிரியாவை அவர் தேர்வு செய்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் இதற்கு ஒப்புதல் தரவே, அடுத்த சில மணி நேரங்களில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், கருணாநிதிக்கு அடுத்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான், தனக்கான செயலாளர்களை தலைமைச் செயலாளர் மூலம் தேர்வு செய்து நியமித்துக் கொண்டது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.