தமிழக செய்திகள்

கணவனுடன் மனைவி வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாது என்பதா? - ஐகோர்ட்டு அதிருப்தி

கணவனுடன் மனைவி வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாது என்ற கீழ்கோர்ட்டு தீர்ப்புக்கு மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.

மதுரை,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எனது மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எனது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சாத்தியமற்றது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- இந்த மேல் முறையீட்டு மனுதாரர் செய்த தவறு என்ன? இவர் வேலை தேடி சிவகங்கையை விட்டு வெளியேறியிருந்தார். அவர் மும்பையில் பணிபுரிந்து வந்தார். ஆனால் அவர் தனது மனைவியை அங்கு அழைத்து சென்று இருக்க வேண்டும். அவரது பாலியல் விருப்பத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். கணவன் எங்கு சென்றாலும் மனைவியை உடன் அழைத்து சென்றால்தான், அதாவது கணவனுடன் வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாமல் இருக்கும் என்பது கீழ் கோர்ட்டு நீதிபதியின் கருத்து.

அவரது இந்த புரட்சிகரமான அணுகுமுறையிலான தீர்ப்பை தீவிர பெண்ணியவாதிகள் பாராட்டக்கூடும். ஆனால் இதை நாங்கள் ஒப்புக்கொள்ள இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மனைவியை எப்போதும் உடன் அழைத்துச் செல்வது சாத்தியமானதாக இருக்காது. உதாரணமாக, கணவன் ஒரு ராணுவ வீரராக இருந்தால், ராணுவ முகாமில் குடும்பத்துடன் வசிப்பது இயலாத காரியம்.

ஒரு விளம்பர காட்சியில் வரும் நாய் போல கணவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மனைவியும் உடன் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்றது. இந்த மனுதாரருக்கு தற்போது 67 வயதாகிறது. கணவனும், மனைவியும் கடந்த 16 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நாங்கள் இருவரிடமும் நடத்திய ஆலோசனையில், அந்த பெண் மீண்டும் கணவருடன் இணைந்து வாழ்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இருவருக்கும் இடையிலான உறவு புதுப்பிக்க முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது.

விவாகரத்து அனுமதி

மீண்டும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்ப தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே இவர்களுக்கு விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. எனவே ரூ.7 லட்சத்தை தன் மனைவிக்கு செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவிடுகி றோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT