தமிழக செய்திகள்

விவசாயிகள் பயப்பட வேண்டாம் தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வராது - அரசு அறிக்கை

தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வராது. விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பாலைவன வெட்டுக்கிளிகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. அவை கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ஊட்டி போன்ற மாவட்டங்களில் அவை காணப்படுவதாக தகவல் வந்ததும் வேளாண்மை, தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வயநாடு ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான ஊட்டி காந்தள் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரம், நெர்லகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவை பாலைவன வெட்டுக்கிளி வகையைச் சார்ந்தவை அல்ல என்றும், உள்ளூர் வகையானவை என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஆப்ரிக்கா நாடுகளில் சிஸ்டோசெர்கா கிரிகேரியா என்ற பாலைவன வெட்டுக்கிளிகள் நடப்பாண்டில் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பாலைவனப் பகுதிகளைக் கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் பெருங்கூட்டமாக படையெடுத்து வந்து சுமார் 33 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு காணப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் (எல்.டபுள்யூ.ஓ.) மூலம் மாநிலங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 29-ந் தேதி வெளியான மத்திய அரசின் அறிக்கையின்படி, ஜூலை வரை இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும் என்றும் பீகார், ஒடிசா வரை அவை பரவினாலும், தென்னிந்திய பகுதிகளில் பரவ வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. விவசாயிகள் அச்சம்கொள்ள வேண்டாம். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, அவற்றின் நகர்வை மத்திய மற்றும் பக்கத்து மாநில வேளாண் துறைகளுடன் சேர்ந்து கண்காணிக்க வேண்டும்.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களை ஒட்டியுள்ள பக்கத்து மாநில பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்கம் உள்ளதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டரின் தலைமையில் வேளாண்மை, தோட்டக்கலை, தீயணைப்பு துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.

அதையும் மீறி அவற்றின் ஊடுருவல் இருந்தால், உடனடியாக எதிர்கொள்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகளை தெளிக்க போதுமான உபகரணங்கள் கையிருப்பில் வைக்க வேண்டும். அவற்றின் தாக்கம் ஏற்பட்டால் விவசாயிகள் டிரம், டின்கள் மூலம் ஒலி எழுப்பி அவை பயிர்கள் மீது அமர்வதை தடுக்கலாம். முதல் சுற்றில் அசாடிராக்டின் என்ற வேம்பு சார்ந்த தாவர பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும்.

பெருங்கூட்டமாக வந்துவிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு மாலத்தியான் 50 சதவீதம் 1.850 லிட்டர் அல்லது மாலத்தியான் 25 சதவீதம் நனையும் தூள் 3.7 கிலோ, குளோர்பைரிபாஸ் 20 சதவீதம் 1.2 லிட்டர் அல்லது லாம்டாசைஹேளோத்ரின் 5 சதவீதம் 400 மி.லி. போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும். லாம்டாசைஹேளோத்ரினை ஒருவர் 2 மணி நேரத்துக்கு மேல் தெளிக்கக்கூடாது.

பரந்த அளவில் வந்தால் மாலத்தியான் 96 சதவீதம் பூச்சிமருந்தை தீயணைப்பு எந்திரம் மூலம் தெளிக்கலாம். சாதாரண உள்ளூர் வெட்டுக்கிளிகள் உயிர் சங்கிலியின் ஒரு பகுதி. அதில் 250 வகைகள் உள்ளன. நன்மை செய்யும் வெட்டுக்கிளிகளும் உள்ளன. நீள்கொம்பு வெட்டுக்கிளிகள், தீமை செய்யும் பூச்சிகளை கொல்லும் என்பதால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். உள்ளூர் வெட்டுக்கிளிகளைக் கண்டு அச்சம்கொள்ள வேண்டாம். கூட்டமாக தென்பட்டால் வேளாண், தோட்டக்கலை துறைக்கு தகவல் தெரிவியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை