சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய, 70 வயதான நாகை மாவட்ட விவசாயி சோமசுந்தரம் என்பவர் நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளைப் படித்தீர்களா முதல்-அமைச்சரே? இம்மரணத்தின் கறைகள் உங்கள் கரங்களிலும் படிந்துள்ளன என்பதை உணர்ந்தீர்களா?
“5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்போரின் அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும்” என்று கூறிய நீங்கள், அரியணையில் அமர்ந்த பிறகு பயிர்க்கடன்களில் வெறும் ரூ.75,000 -த்தை மட்டுமே தள்ளுபடி செய்வதாக மாற்றி அறிவித்தது அப்பட்டமான ஏமாற்று நாடகம். சொன்னதை சொன்னபடி செய்யாத உங்கள் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் தான், தற்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுடன் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆனால், போராடும் விவசாயிகளை நீங்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
உலகிற்கே படியளக்கும் விவசாயிகளை இப்படி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வதைப்பதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை முதல்-அமைச்சரே. எனவே, போராட்டங்கள் மூலமாவது உங்கள் கவனத்தைப் பெற முடியுமா என தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை இனியும் வஞ்சிக்காதீர்கள். இனியொரு உயிர்பலி நடக்கும் முன்னே, நீங்கள் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள்! உண்டி கொடுத்தோரின், வாழ்வாதாரத்தைப் பேணுங்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.