சென்னை,
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் சுமூக நிலையை எட்டவில்லை. இதனால் அவர்கள் இருவரும் தனித்தனியாக இந்த தேர்தலை சந்தித்தனர்.
அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார். டாக்டர் ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தார். அவர். அன்புமணியின் தரப்பு வேட்பாளர்கள் போட்டியிட்ட 18 தொகுதிகளிலும் தனது தரப்பு வேட்பாளர்களை களமிறக்கினார்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் (டாக்டர் அன்புமணி தரப்பு) கணேஷ்குமாரை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தரப்பு வேட்பாளரான பெருமாள் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் போட்டியிட்டார். அதுபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அன்புமணி தரப்பு வேட்பாளரான சிவக்குமாரை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தரப்பில் ஸ்டாலின் போட்டியிட்டார்.
இதில் அன்புமணி தரப்பு வேட்பாளர்களான கணேஷ்குமார், சிவக்குமார் ஆகிய இருவரும் வெற்றி வாகை சூடினர். அதேநேரத்தில் டாக்டர் ராமதாஸ் அணி சார்பில் களமிறக்கப்பட்ட செஞ்சி தொகுதி வேட்பாளர் பெருமாள் 285 வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் 194 வாக்குகளுமே பெற்று டெபாசிட் இழந்தனர்.