சென்னை,
சென்னை அண்ணாசாலையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் பெண் ஒருவர் மர்மமான முறையில் குளியலறை தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 15-ம் தேதி இரவு அறை எடுத்து தங்கிய நிலையில் தான் மறுநாள் காலையில் குளியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் உடலில் ஆடைகள் எதுவும் இன்றி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் உயிரிழந்த பெண்ணின் பெயர் ரோஜா என்பதும் இவர் வக்கீலாக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வக்கீல் ரோஜாவின் மரணம் தொடர்பாக மர்ம சாவு என வழக்கு பதிவு செய்த போலீசார் அவருடன் தங்கி இருந்த ஆண்பரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த ஆண் நண்பர் வக்கீல் ரோஜா எப்படி இறந்தார் என்பது எனக்கு தெரியாது? 15-ம் தேதி இரவில் இருவரும் ஒன்றாக மது அருந்தினோம். அதன் பிறகு நான் எனடு வீட்டுக்கு சென்று விட்டேன்.
மறுநாள் காலையில் ரோஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தநிலையில் நேரில் வந்து பார்த்தபோதுதான் அவர் இறந்ததே எனக்கு தெரிய வந்தது என கூறினார். இதன் காரணமாக பெண் வக்கீல் மரணம் அடைந்தது எப்படி என்பது பற்றி பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பெண் வக்கீல் சாவில் அதிரடி திருப்பமாக நடிகை ஸ்ரீதேவியை போன்று குளியலறை தொட்டியில் அவர் உயிரிழந்தது கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15-ம் தேதி இரவில் அவரது ஆண் நண்பர் வெளியில் சென்றதும் ரோஜா மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். அளவுக்கு அதிகமாக வக்கீல் ரோஜா மது அருந்திய நிலையில் போதையில் நட்சத்திர ஓட்டல் கழிவறைக்கு குளிக்க சென்றுள்ளார்.
குளியலறை தண்ணீர் தொட்டியில் இறங்கி அவர் குளித்தபோது திடீரென போதை காரணமாக அதில் மயங்கி விழுந்து உள்ளார். இதன்பிறகு அவரால் தண்ணீர் தொட்டியில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போய் உள்ளது. இதன் காரணமாக அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
பிரேத பரிசோதனை மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளன.
திருவண்னாமலையை சேர்ந்த பெண் வக்கீல் ரோஜாவுக்கு ஏற்கனவே திருமணம் அகி உள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் அவர் சென்னையில் தங்கி இருந்து வக்கீலுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது தான் சமூக வலைதளம் மூலமாக ஆண் நண்பரான யஸ்வந்த் என்பரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காரணமாகவே இருவரும் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள்.
இது போன்ற சூழலில் தான் இரவில் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக ஆண் நண்பர் சென்றுள்ளார். மறுநாள் காலையில் போன் செய்தும் எடுக்காததால் நேரில் வந்து அவர் பார்த்தபோது தான் வக்கீல் ரோஜா உயிரிழந்தது தெரிய வந்தது.
நட்சத்திர ஓட்டல் அறையில் ஆண் நண்பர் சென்ற பிறகு அவர் தனியாக தங்கி இருந்ததால் குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கி பலியானது யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் காலையில் ஆண் நண்பர் வந்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கூறிய பிறகுதான் ரோஜா உயிரிழந்தது வெளியில் தெரிய வந்துள்ளது.
போதைக்கு அடிமையான நிலையில் அதுவே பெண் வக்கீல் ரோஜாவின் உயிரையும் பறித்திருப்பது அவரது குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.