சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களை கடுமையாக பாதித்து வருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவ, மாணவியர் உயிரை பறித்து வரும் துயரமும் தொடர்கிறது.
இந்த நிலையில் அண்மையில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து விட்டதாகக் கூறி, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்காலத்தை நிலை குலைத்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து 16.5.2026, சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும் என்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.