தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்ட நாட்களாகச் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26-ம் நிதியாண்டு வரை (31.3.2026 வரை) சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வரிவிதிப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா உத்தரவின்படியும், கிழக்கு மண்டல உதவி கமிஷனரின் அறிவுறுத்தலின்படியும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, கிழக்கு மண்டல உதவி கமிஷனரின் அறிவுரையின்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 24 மற்றும் 47 வார்டுகளுக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு மற்றும் வடக்கு ராஜா பகுதிகளில் குறைந்தபட்சம் 2023-24-ம் ஆண்டு முதலும் அதிகபட்சம் 2018-19-ம் ஆண்டிலிருந்தும் சொத்துவரி (நிலுவை தொகை ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை) செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களுக்கு முறையாக கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு வழங்கியும் நிலுவை வரி செலுத்தாதனை முன்னிட்டு இன்று மாநகராட்சி அலுவலர்களால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது.
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், தங்களது சொத்து வரி நிலுவையை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால், நடைமுறையில் உள்ள மாநகராட்சி விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
"பொதுமக்கள் அனைவரும் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் போன்றவற்றை நடப்புக் காலம் வரை செலுத்தியுள்ளீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிலுவை இருப்பின் உடனடியாகச் செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.