தமிழக செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்; டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.

புதுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலியை சேர்ந்தவர் ஆபாவணன் (வயது 26). டிரைவர். இவர் புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இந்நிலையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆபாவணனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், ஆபாவணனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.