தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி

தென்காசியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற லாரி எதிர்பாராதவிதமாகத் திடீரென நின்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சுண்டப்பபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் முனியாண்டி (வயது 58), லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று முனியாண்டி தனது வாகனத்தில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

எட்டயபுரம் அருகே சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற லாரி எதிர்பாராதவிதமாகத் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது முனியாண்டி பிரேக் போட்டு வாகனத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தும், லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னர் நின்ற லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முனியாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முனியாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மகன் ரஞ்சித் ஜோத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.