கிருஷ்ணகிரி,
விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் 3 டன் மல்லிகை பூக்களை தென் பெண்ணை ஆற்றில் விவசாயிகள் கொட் டிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர், பர்கூர் உள்ளிட்ட 40 கி.மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை நம்பி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலையால் மல்லிகை பூக்கள் முன்கூட்டியே பூத்துவிட்டன. இதனால் கடந்த சில நாட்கனாக வெளிச்சந்தைகளில் பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக 40 சரக்கு வேன்களில் அனுப்பப்பட்ட 50 டன் மல்லிகை பூக்களில் 5 டன் பூக்கள் விலை போகவில்லை. சென்ட் தொழிற்சாலைகள் மிகக் குறைந்த விலையே கோரியதால், விவசாயிகளால் அதனை விற்க முடியவில்லை.
உள்ளூரில் அதிகளவு விளைந்த பூக்களை விற்க வசதியில்லாததாலும், உரிய விலை கிடைக்காத தாலும் வேறு வழியின்றி காவேரிப்பட்டணம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 3 டன் அளவிலான மல்லிகை பூக்களை கொட்டி விவசாயிகள் அழித்தனர். போதிய விலை கிடைக்காத இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மல்லிகை விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி பாலாஜி என்பவர் கூறும் போது, பருவம் தவறி முன்கூட்டியே பூக்கள் மலர்ந்துவிட்டதால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில் விளைச்சல் குறைந்துவிடும் என்றும். இதனால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார். எனவே, கிருஷ்ணகிரியில் அரசு சார்பில் சென்ட் தொழிற்சாலை தொடங்கினால் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.