போதைப்பொருள் 
தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த மலேசிய பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 62 வயது மலேசிய பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசிய தகவல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அப்போது, மலேசியாவிலிருந்து வந்த 62 வயதுடைய பயணி ஒருவரின் நடத்தை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சுங்கத்துறை அதிகாரிகள்

உடனே அவரைத் தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், தனியறைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அவர் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். அப்போது, அவரது பைகளில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொட்டலங்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

சுமார் 3.5 கிலோ போதைப்பொருள்

அந்த பொட்டலங்களை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் சர்வதேச சந்தையில் அதிக மதிப்புடைய போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடமைகளில் இருந்து மொத்தம் 3,452 கிராம் சுமார் 3.5 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய பயணி கைது

இதையடுத்து, கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்களை 1985-ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநலம் சார்ந்த பொருட்கள் சட்டத்தின் கீழ் சுங்கத்துறை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த மலேசிய பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தீவிர விசாரணை

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் யார்? சென்னையில் இந்த போதைப்பொருள் யாருக்கு கை மாறவிருந்தது? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT