ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 
தமிழக செய்திகள்

மது போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து - ஓட்டுநரை விரட்டி விரட்டி புரட்டி எடுத்த பொதுமக்கள்

ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் கடுமையான மது போதையில் இருப்பது தெரியவந்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமர் மாவட்டம் நாகர்கோவில் அருகே மது போதையில் ஆம்புலன்ஸ் ஒட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டிநரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து புரட்டி எடுத்தனர்.

விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் பரபரப்பான வெட்டுரிணிமடம் சந்திப்பு பகுதியில் இன்று மதியம் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அதிவேகமாகவும், கட்டுப்பாடின்றியும் வந்தது. மேலும் எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் அங்கிருந்த மற்றுமொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மக்களின் ஆக்ரோஷம்

விபத்து நடந்தவுடன் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அவரை விடாமல் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கடுமையான மது போதையில் இருப்பது தெரியவந்தது. உயிரைக் காக்கும் அவசர வாகனத்தை மது போதையில் ஓட்டி உயிரோடு விளையாடிய ஓட்டுநரின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள், அவரை வீதியிலேயே வைத்து அடித்து புரட்டி எடுத்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பொறுப்பற்ற செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.