நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் பெரிய அளவிலான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், தற்போது ரூ.12 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். இதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றை ரூ.11 ஆயிரத்திற்கும், தற்போது ரூ.13 ஆயிரத்திற்கும் வாங்கி சென்றனர். வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.