தமிழக செய்திகள்

கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி...!

கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தினசரி மாலையில் மகாபாரத சொற்பொழிவும் 14-ம் தேதி முதல் இரவில் மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலையில் கோவில் வளாகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி நீளத்திற்கும் 40 அடி அகலத்திலும் மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த துரியோதனன் சிலையின் முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடக கலைஞர்கள் துரியோதனனும் , பீமனும் வேடமிட்டு தத்ரூபமாக போர்க்களத்தில் சண்டையிடுவது போல நடித்து காட்டினர்.

துரியோதனன் படுகளம் ஆனாதும் பாஞ்சாலை கூந்தலை அள்ளி முடித்து சபதத்தை நிறைவேற்றிய காட்சிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ். எஸ்.ராமச்சந்திரன், ஆவின் தலைவர் பாரி பி. பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு களித்தனர். தொடர்ந்து மாலையில் தீமிதி விழாவும், நாளை தருமர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.