தமிழக செய்திகள்

போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் இன்று 3 மணிநேரம் இயங்காது

இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தொகுப்பூதிய முறையை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறுபவர்களுக்கு முறையான ஓய்வூதிய சலுகைகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் கடந்த 5-ந்தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் போராட்ட குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இதனால், 3 மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.