சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம். படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?.
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்-அமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டது போதும். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்- தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.