சென்னை,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள்தான் காரணம் என்று மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே பேசியதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் பா. ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஷோபாவின் வெறுப்பு பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இது போன்ற பிரிவினைவாத பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.