தமிழக செய்திகள்

‘போர்வாள்’ என்ற பெயரில் புதிய பத்திரிகை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

அதிமுக தொடர்பான அறிவிப்புகள் போர்வாள் பத்திரிகையில் வெளியாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகிறது. அதில் வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதால் வேலுமணி தரப்பினர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் எடப்பாடி தரப்பினர் மனு அளித்தனர். இரு தரப்பினரும் தனித்தனியே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து முறையீட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ‘போர்வாள்’ என்ற பெயரில் புதிய பத்திரிகையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். தனது தரப்பு நிர்வாகிகளுடன் சேர்ந்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுகவின் போர்வாள் நாளேட்டை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இனி அதிமுக தொடர்பான அறிவிப்புகள் போர்வாள் பத்திரிகையில் வெளியாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது அம்மா, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வசம் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.