சேலம்,
கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அருண்குமார், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் களமிறக்கப்பட்டவர் அருண்குமார். வேட்புமனு பரிசீலனையின் போது, இவரது மனு மற்றும் இவரது மனைவியின் மாற்று வேட்புமனு ஆகிய இரண்டுமே மனுக்களும் போதிய ஆவணங்கள் மற்றும் முறைப்படி பூர்த்தி செய்யப்படாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மனு நிராகரிக்கப்பட்ட சமயத்தில் அருண்குமார் திடீரென தலைமறைவானது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.
தேர்தல் முடிவடைந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அருண்குமார், தனக்கு அதிமுகவிலேயே தொடர விருப்பம் தெரிவித்து அக்கட்சியில் இணைந்தார். பழைய அதிமுக நிர்வாகியான அருண்குமார், மீண்டும் தனது 'தாய் கழகத்திற்கே' திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண்குமாரின் இந்த திடீர் கட்சி மாற்றத்தை தொடர்ந்து தவெக தரப்பில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. தேர்தலின் போதே திட்டமிட்டு, சூழ்ச்சி செய்து தான் அருண்குமார் தனது வேட்புமனுவை நிராகரிக்க செய்தார் என்றும், தற்போது அது அம்பலமாகிவிட்டது என்றும் தவெகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.