கும்பகோணம்,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- உன்னை ஆளனும் என்று வரவில்லை, நீ வாழ வேண்டும் என்று தான் வந்துள்ளேன்.
நான் ஆட்சிக்கு வந்தால் தூய குடிநீரை உன் வீட்டு வாசலில் கொண்டுவந்து தருவேன். அப்போலோ. கின்லே போன்ற தனியார் குடிநீருக்கு தடை விதிப்பேன். அதையும் மீறி விற்பனை செய்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள். கல்வி, மருத்துவம் வியாபார நோக்கத்தில் நடத்தப்படாது. மீறி தனியார் முதலாளிகள் வியாபாரத்தில் ஈடுபட்டால் தனியாரிடம் இருக்கும் பள்ளி, மருத்துவம் போன்றவை அரசு உடைமையாக்கப்படும். தடையில்லாமல் மின்சாரம் வழங்குவேன். இலவச மின்சாரம், பஸ் தரப்போவதில்லை. ஏசி பஸ் தருகிறேன் அதில் காசு கொடுத்து செல்லுங்கள்.
எதுவும் இலவசம் கிடையாது, தாலிக்கு தங்கம் கண்டிப்பாக தரமாட்டேன். காலம் முழுவதும் உன்னுடன் வாழவரும் பெண்ணிற்கு ஒரு பவுனில் தாலி கூட வாங்கி கட்ட முடியாத உனக்கு கல்யாணம் தேவையில்லை. அதற்கு நீ செத்துப் போகலாம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.