தமிழக செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: கிளாம்பாக்கத்துக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கம்

புறநகர் மின்சார ரெயில் சேவையில் 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையில் 20-ந் தேதி (நாளை) முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மாநகர போக்குவரத்துக் கழகம் 20-ந் தேதி முதல் ஏப் ரல் 5-ந் தேதி வரை ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தாம்ப ரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண் இ-18-ல் 16 பஸ்களும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18-ஏ-ல் 28 பஸ்கள் என 44 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து 35 பஸ்கள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 50 பஸ்கள், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.