தமிழக செய்திகள்

ரெயிலில் புகையிலை, குட்கா கடத்திய முதியவர் கோவில்பட்டியில் கைது!

62 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

பெங்களூரில் இருந்து ரெயிலில் புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்த நபரை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன், ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டி மற்றும் போலீசார் இன்று காலை ரெயில் நிலைய நடைமேடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூரு – மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9 மணியளவில் கோவில்பட்டி வந்தது. அந்த ரெயிலில் இருந்து ஒருவர் நான்கு பெரிய பைகளுடன் இறங்கினார். அவரது நடத்தை சந்தேகமாக இருந்ததால் போலீசார் அவரைத் தடுத்து சோதனை செய்தனர்.

சோதனையில், அந்தப் பைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 62 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கையா என்பவரின் மகன் மாரிமுத்து (67) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் ஏற்கனவே இதுபோன்று பெங்களூரில் இருந்து புகையிலை கடத்திய வழக்கில் இருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.