காளநாயக்கர்  
தமிழக செய்திகள்

பவானி அருகே நிலத் தகராறில் டிராக்டர் ஏற்றி முதியவர் கொலை – உறவினர்கள் சாலை மறியல்

முதியவர் மீது திட்டமிட்டு டிராக்டரை ஏற்றி அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நிலத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் மீது டிராக்டரை ஏற்றி கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலப் பிரச்சனை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் காளநாயக்கர் (வயது 71). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலப் பிரச்சனை மற்றும் முன்விரோதம் இருந்து வந்தது. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

டிராக்டர் ஏற்றி கொலை

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை உழுவதற்காக ரங்கசாமி தனது டிராக்டருடன் சென்றார். இதனைப் பார்த்த காளநாயக்கர், ரங்கசாமியைத் தடுத்து நிறுத்தி, "எங்கள் நிலத்தை எப்படி நீ உழலாம்?" எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே சண்டை முற்றவே, கடும் ஆத்திரமடைந்த ரங்கசாமி, முதியவர் காளநாயக்கர் மீது திட்டமிட்டு டிராக்டரை ஏற்றி கொடூரமாக கொலை செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினார்.

போலீஸ் விசாரணை -சாலை மறியல்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி மற்றும் போலீசார், காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து ரங்கசாமி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT