தமிழக செய்திகள்

வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம்; சாத்தான்குளம் அருகே பரபரப்பு

சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூன்று நாட்களாக கிடந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவரது மனைவி ஜெயலட்சுமி (67). இவர் இதய நோய்க்காகத் தினசரி மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டிலிருந்து திடீரெனத் துர்நாற்றம் வீசியதை அடுத்து பக்கத்து வீட்டுப் பெண் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.

போலீசார் விசாரணை

அப்போது ஜெயலட்சுமி வீட்டுக்குள்ளேயே அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 3 நாட்கள் ஆகலாம் எனத் தெரியவந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.