சென்னை.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 மாநில (தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், கேரளா) தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, மே 4-ம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாள் (ஏப்.23) அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி அன்றும், மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அங்கும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும்வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் நினைவில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.