தமிழக செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

கோவில்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாநிதியை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கயத்தாறு பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தை முடித்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். பின்னர் அங்கிருந்து காரில் இளையரசனேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

காரில் சோதனை: அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தேர்தல் பறக்கும் படையின் நிலையான கண்காணிப்பு அதிகாரியான கூட்டுறவு துறை தணிக்கையாளர் வேல்முருகன் தலைமையில், போலீசார் செல்வி, அய்யலுசாமி, பால் தினகரன் ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் கார் மற்றும் அவருடன் வந்த வாகனங்களை நிறுத்தினார்கள்.

கார்களில் சோதனையிட்டு, அதில் ஏதேனும் ரொக்க பணம், பரிசு பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர் தனது காரில் பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.