தமிழக செய்திகள்

தேர்தல் பறக்கும் படை சோதனை: மதுராந்தகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சென்னையில் உள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

மதுராந்தகம்,

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

மதுராந்தகம் அடுத்த அரைப்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையிலான குழுவினர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தவமணியின் காரை சோதனையிட்டதில், அதில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனையைத் தீவிர படுத்தியுள்ளனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT