சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, தேர்தல் பொது பார்வையாளர் கன்ஷியாம் தோரி, இ.ஆ.ப., தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ். லட்சுமி பிரியா முன்னிலையில், காவல்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று அடையாறு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் அலுவலர்களுடன் கன்ஷியாம் தோரி உரையாடி, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, அவருடைய தலைமையில், காவல் துணை ஆணையர்கள், உதவி காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி செலவின பார்வையாளர்கள் குழு, கணக்கு குழு, வீடியோ பதிவு செய்யும் குழு மற்றும் இதர தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுடனான தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என். காளிதாஸ், காவல் துணை ஆணையாளர்கள் ஏ.சி. கார்த்திகேயன், வி.ஆர். சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.