கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தேர்தல் வாக்குறுதி: காப்பி அடித்தே பழகியவர்கள் தி.மு.க.காரர்கள்தான் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ஆண்களுக்கும் இலவச பஸ் பயண திட்டம் ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆண்களிலும் வயதானவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் போன்ற பாவப்பட்ட மக்கள் இருக்கின்றனர். பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாதவர்களும் இருக்கிறார்கள். அதனால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயண திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை குலவிளக்கு திட்டமாக மாற்றி அறிவிக்கவில்லை. கடந்த தேர்தலின்போது, வெளியான அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது அதனை ரூ.2 ஆயிரமாக வழங்குவதாக அறிவித்து உள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் நல்ல குணத்திற்கு எடுத்துக்காட்டு. இது யாரையும் காப்பியடித்து அறிவித்த திட்டமல்ல. காப்பி அடித்தே பழகியவர்கள் தி.மு.க.காரர்கள்தான். அ.தி.மு.க. அறிவிப்புகளை வெளியிட்ட உடனேயே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது.

சென்னையில் தி.மு.க. எல்.எல்.ஏ. ஒருவர், அவரது சட்டமன்ற தொகுதியில், தென்மாவட்டங்களில் கொடுப்பது போன்று சீர்வரிசை பொருட்கள் கொடுக்கிறார். ஆட்சியின்போது மக்களுக்கு நல்லது செய்திருந்தால், இதுபோல் சீர்வரிசை பொருட்கள் கொடுக்க வேண்டியதிருக்காது. தி.மு.க.வினர் பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

பா.ஜனதாவினர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி பலமானது. அதில் எந்தவித குறைபாடு இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT