தமிழக செய்திகள்

சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சீபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT