தமிழக செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை - மைத்துனர் உள்பட 3 பேர் கைது

ரத்தினவேல் பாண்டியனுக்கும், அவரது மைத்துனரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.

சென்னை,

கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40 வயது). எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரத்தினவேல் பாண்டியனுக்கும் அவரது மைத்துனர் சரவணனின் (39 வயது) மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரவணன் பலமுறை ரத்தினவேல் பாண்டியனை கண்டித்தும், அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், ரத்தினவேல் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த எம்.எ.நகர். வ.உ.சி. தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனை சரவணன், அவரது தம்பி தனசேகர் (34 வயது), உறவினர் பழனிசாமி (45 வயது) ஆகியோர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ரத்தினவேல் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த செங்குன்றம் உதவி கமிஷனர் பிராங்கிளின் ரூபன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ரத்தினவேல் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன், தனசேகர், பழனிசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.