கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சென்னை,

தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மின் இணைப்பு

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வன் (47 வயது). இவர் தனது தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதல் ஒற்றை மின் இணைப்பு கேட்டு கடந்த ஜூலை மாதம் 9-ம்தேதி கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.

லஞ்சம்

ஆனால், கடந்த மாதம் 6-ந்தேதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டின் மின்திறனை 1 கே.வி.யில் இருந்து 3 கே.வி.யாக உயர்த்தக் கோரி கடந்த மாதம் 10-ந்தேதி மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால் மின்வாரிய உதவி பொறியாளர் சந்திரன் என்பவர், பணியை முடித்து தருவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தொகையை ரூ.7 ஆயிரமாக குறைத்ததாக தெரிகிறது.

போலீசில் புகார்

லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசெல்வன், இதுகுறித்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பொடி தடவிய ரூ.7 ஆயிரத்தை சிவசெல்வனிடம் கொடுத்து அனுப்பினர்.

கைது

அப்போது மின்வாரிய அலுவலகத்தில் சந்திரன் இல்லாததால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தாம்பரம் சானடோரியம் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி சிவசெல்வன் அங்கு சென்று பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.12,540-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT