குமரி,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்காக ஒவ்வொரு தேர்தலின்போதும் அங்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்படுறது.
அந்த வகையில் இந்த முறையும் அங்க இருக்கக்கூடிய 12 வாக்காளர்கள் அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக தேர்தல் அதிகாரிகள் 125 கி.மீ. பயணம் செய்து வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்குள்ள வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அதிகாரிகள் நெல்லை அம்பாசமுத்திரம் வழியாக அடர்ந்த வனப்பகுதியை கடந்து அங்குள்ள சிறிய வாக்குச்சாவடியை சென்றடைந்தனர். ஒரு வாக்கு கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில செயல்படக்கூடிய தேர்தல் அதிகாரிகளின் முயற்சி பாராட்டைப் பெற்றுள்ளது.