தமிழக செய்திகள்

தலையாரியின் உடல் அடக்கம் நடந்த இடத்தில் மகளுக்கு பணி நியமன ஆணை

தேவகோட்டையில் தலையாரியின் உடல் அடக்கம் நடந்த இடத்தில் மகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திருவேகம்பத்தூர் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கண்மாயில் 3 ஏக்கர் அளவிலான இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்(50) என்பவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தது குறித்து புகார் செய்யப்பட்ட நிலையில், கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இதற்கு திருவேகம்பத்தூரை சேர்ந்த தலையாரி ராதா கிருஷ்ணன்(50) என்பவர் தான் காரணம் என்று கணேசன் எண்ணினார். இதையடுத்து அவர், ராதா கிருஷ்ணனை போனில் மிரட்டினார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, அவரை வழிமறித்து கணேசன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதில் சம்பவ இடத்திலேயே ராதா கிருஷ்ணன் இறந்தார்.

இந்தநிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று காலை போராட்டம் நடந்தது. தலையாரியை வெட்டி கொன்ற கொலையாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கொல்லப்பட்டவரின் வாரிசுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இறந்தவரின் உடலை வாங்கி செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறினர்.

மேலும் இந்த போராட்டம் மாலை வரை நீடித்ததை தொடர்ந்து, கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் மேசியாதாஸ் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார், இறந்தவரின் மகள் தாரணிக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி உடனடியாக வழங்கப்படும்.

ராதா கிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறியதை தொடர்ந்து, ராதா கிருஷ்ணனின் உடல் மருத்துவமனையில் இருந்து திருவேகம்பத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது.

போலீசார் விசாரணையில் கணேசன் ஏற்கனவே முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இந்தநிலையில், தலையாரி உடல் அவரது ஊரான திருவேகம்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தலையாரியின் மகளுக்கு வி.ஏ.ஓ. பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்