மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு கிராமத்தில் அமராவதி பிரதான கால்வாயின் பாசன வாய்க்கால் பகுதியை சிலர் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்து இருந்தனர். இது குறித்து, ‘தினத்தந்தி' யில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. இந்த செய்தியின் எதிரொலியாக, மடத்துக்குளம் தாசில்தார் ரம்யா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையொட்டி துங்காவி நில வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், காரத்தொழுவு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றினர். இதன் மூலம் பாசன வாய்க்கால் மீட்கப்பட்டது. இதனால் செய்தி பிரசுரித்த ‘தினத்தந்தி' க்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.