தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு

வெள்ளாளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், செட்டிகுறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த இன்ஜினியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

என்ஜினியர்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (வயது 27). பி.இ. சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், தனியார் சோலார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவில் வெள்ளாளன்கோட்டை கிராமத்திலிருந்து செட்டிகுறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பைக் விபத்து

அப்போது எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், மாரிச்செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்பு

பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.