என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. 26,851 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். முதல் சுற்று நிறைவில் 146 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலை இருக்கிறது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. தற்காலிக ஒதுக்கீடு ஆணையை உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் வாயிலாக எவ்வளவு இடங்கள் நிரம்பின என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பொதுப்பிரிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 37,976 பேரில் 24,674 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்து சேர்ந்திருக்கின்றனர்.
பொதுப்பிரிவில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 81 ஆயிரத்து 434 இடங்களில் 24 ஆயிரத்து 674 இடங்கள் நிரம்பியுள்ளன. அதாவது 13.6 சதவீ தம் இடங்களில் சேர்ந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 1 லட்சத்து 56 ஆயிரத்து 760 இடங்கள் காலியாக இருக்கின்றன.
முதல் சுற்று கலந்தாய்வில் பெரும்பாலும் கணினி அறிவியல் என்ஜினீயரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். அதேபோல் கோர் என்ஜினீயரிங் படிப்புகளிலும் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதுதவிர, சுமார் 20 என்ஜினீயரிங் சார்ந்த பாடப்பிரிவுகளில் எந்த ஒரு இடத்தையும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்யாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது.
கல்லூரிகளை பொறுத்தவரையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் 1,138 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில் கோவை கிருஷ்ணா கல்லூரியில் 1,638 இடங்களும் அதிகபட்சமாக நிரம்பியுள்ளன. 422 கல்லூரிகளில் 146 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையையும் பார்க்க முடிகிறது.
கட்-ஆப் மதிப்பெண்ணில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்த 52 பேரில் 38 பேரும், 195 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த 2,151 பேரில் 1,506 பேரும், 190 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த 6,627 பேரில் 4,409 பேரும் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இதில் 190 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களில் 2,218 பேர் இடங் களை தேர்வு செய்யாமல் இருந்துள்ளனர்.
பொதுப்பிரிவில் முதல் சுற்றில் வேகம் குறைந்துள்ள நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு விறுவிறுப்பாக நடந்திருக்கிறது. முதல் சுற்றில் பங் கேற்க தரவரிசையில் 1 முதல் 2,570 வரை இடம்பெற்றிருந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 2,177 பேர் இடங்களை தேர்வு செய்து என்ஜினீயரிங் படிப்பை உறுதி செய்துள்ளனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் முதல் சுற்றில் பொதுப்பிரிவில் 24,674 இடங்களும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 2,177 இடங்களும் என மொத்தம் 26 ஆயிரத்து 851 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. பொதுப்பிரிவு தரவரிசையில் 37,977 முதல் 1,31,093 வரை இடம்பெற்றுள்ளவர்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 2,571 முதல் 18,036 வரையில் இடம்பெற்றுள்ளவர்கள் அழைக் கப்பட்டிருக்கின்றனர். விருப்ப இடங்களைதேர்வு செய்ய நாளை (புதன்கிழமை) அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பின்னர், தற்காலிக ஒதுக்கீடு பெறுவது. அதனை உறுதி செய்வது, கல்லூரிகளில் சேருவது என வருகிற 17-ந்தேதி வரை இந்த 2-வது சுற்று கலந்தாய்வு நடக்கிறது.
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் கடந்த ஆண்டு (2025) இருந்த இடங்களை காட்டிலும் நடப்பாண்டில் (2026) இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு 425 கல்லூரிகளில் இருந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 241 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டன. நடப்பாண்டில் 422 கல்லூரிகளில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 436 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப் பட்டு வருகிறது.
அதாவது கடந்த ஆண்டைவிட 8 ஆயிரத்து 195 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள் ளன. இதில் முக்கிய பாடப்பிரிவுகளான கணினி அறிவியல் மற்றும் என்ஜினீய ரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், கணினி அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் (ஏ.ஐ. மற்றும் மெஷின் லேனிங்), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்றவற்றில் இடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
கணினி அறிவியல் மற்றும் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என் ஜினீயரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற பாடப்பிரிவு களில் கடந்த ஆண்டைவிட அதிகபட்சமாக சுமார் 2 ஆயிரம் இடங்கள் வரை உயர்த்தியிருக்கின்றனர்.