புதுச்சேரி
புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). இவரது மகன் யுவராஜ் (20). மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் 2 பேருடன் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு பின்புறம் கடலில் இறங்கி குளித்தார். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் கடலில் குதித்து அலையில் சிக்கி தத்தளித்த 3 பேரையும் மீட்டனர். அப்போது மயக்க நிலையில் இருந்த 3 பேரும் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் யுவராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.